’ஆரியன்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
அறிமுக இயக்குனர் பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘ஆர்யன்’.
ஹரீஷ் கண்ணன். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷாலே இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
பிக் விஷன் என்ற தனியார் தொலைக்காட்சியில் பொருளதிகாரம் என்கின்ற தலைப்பில் நேருக்கு நேர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த வாரம் அவருடனான நேரடி பேட்டியில் கலந்து கொள்ள புகழ் பெற்ற நடிகரான கைலாஷ் அங்கு வந்திருக்கிறார். பல பிரபலங்களை நேருக்கு நேராக பேட்டி எடுத்து புகழ் கண்டவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் பிரபலமாகாத விரக்தியில் இருக்கும் எழுத்தாளர் செல்வராகவன் திடீரென்று துப்பாக்கி முனையில் பேட்டியின் நடுவே வந்து நடிகரை காலில் சுட்டு, ஸ்டுடியோவைக் கட்டுப்படுத்தி, துப்பாக்கியுடன் அனைவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக சேனலில் தெரிவதால் நாடு முழுவதும் வைரலாகி அனைவருமே சேனலை கவனிக்கிறார்கள்.
அந்த அரங்கத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் செல்வராகவன். ஒரு மணி நேரத்தில் இங்கு ஒரு கொலை நடக்கவிருப்பதாகவும் கூறி மிரட்டுகிறார்.சற்று நேரத்தில், வரும் ஐந்து நாட்களில் ஒவ்வொருவராக ஐந்து பேரை தான் கொலை செய்யவிருப்பதாகவும் போலீஸ் முடிந்தால் தடுத்து பார்க்கட்டும் என்று கூறி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார் செல்வராகவன். போலீஸ் சேனல் ஸ்டுடியோவை சுற்றி வளைத்து, பிணைக் கைதிகளை காப்பாற்றி விட்டு, செல்வராகவன் மிரட்டல் குறித்து விசாரிக்கும் போலீஸ்துறை, தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் தலைமையில் குழு ஒன்றை அமைக்கிறது. கொலையாளி செல்வராகவன் செய்ய இருக்கும் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். தொடர் கொலைகளை தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தும் அதெல்லாம் தோல்வியில் முடிகிறது. இறுதியில் இறந்த செல்வராகவனால் எப்படி திட்டமிட்டபடி கொலை செய்ய முடிகிறது? அவர்களை கொலை செய்ய வேண்டிய காரணம் என்ன.? கொலைகள் எப்படி நடந்தன? என்பதை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா என்பதுதான் இந்த ‘ஆர்யன்’ என்ற படத்தின் மீதிக்கதை.
விஷ்ணு விஷால் ஏற்கனவே இதுபோன்ற தேடுதல் வேட்டை உள்ள சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட விதத்தில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால், கொலை வழக்கை விசாரிக்கும் பணியில் ஈடுபடும்போது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இந்தக் கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் அதிரடியான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் வசன உச்சரிப்பு நடிப்பு என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக செய்து முடித்திருக்கிறார். சொல்லப் போனால் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதைக்கு தகுந்தவாறு பலம் சேர்க்கும் வகையில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்தில் பாடல்களை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு பின்னணி இசையை அசத்தலாக அமைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், தன் கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம், ரசிகர்களை கவர்கிறார்.
கதை, எழுதி இயக்கியிருக்கும் பிரவீன்.கே, இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை, காட்சிக்கு காட்சி நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கும்படியான ஒரு திரைக்கதையைக் கொடுத்து அதில் படத்தை வேகப்படுத்தி புதிய முயற்சியில் ஒரு சைக்கோ திரில்லர் படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஆரியன்’ படம் திரில்லர் ,ஜானர் ரசிகர்களை கவரும்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.