Take a fresh look at your lifestyle.

’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ திரைப்பட விமர்சனம்!

53

சென்னை:

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லேன், சந்து சலீம்குமார், அருண் குரியன் , சாண்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’. இப்படத்தை  டாமினிக் அருண் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

காட்டுப்பகுதிகளை ஆண்ட அரசன் தான் வணங்கும் கோயிலுக்குள் வரும் இரண்டு ஏழை சிறுமிகளால் கோபமடைந்து அப்பகுதியில் உள்ள கோயிலை எரிப்பதுடன் சிறுமியின் குடும்பத்தினரையும் கொல்கிறான்.அவரிடமிருந்து தப்பிச் செல்லும் சிறுமி கல்யாணி பிரியதர்ஷன் நீலி கடவுளின் சக்தி பெறுகிறாள். இதையடுத்து யாரையும் வெல்லும் சக்தி படைத்தவள் ஆவதுடன் யக்க்ஷை எனப்படும் ஜாம்பி போல் மாறுகிறாள். கதை நவீன காலத்துக்கு வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த நஸ்லேன், சந்து சலீம்குமார், அருண் குரியன் மூவரும் உயர் படிப்பிற்காக பெங்களூரு செல்கின்றனர்.  அமானுஷ்ய சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். அங்கு, நஸ்லேன், சந்து சலீம்குமார், அருண் குரியன் மூவரும் குடியிருக்கும் எதிர் வீட்டில் நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் வந்து தங்குகிறார். இந்த சூழலில்  நஸ்லேனுக்கு கல்யாணி பிரியதர்ஷன் மீது காதல் கொள்வது போல ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதனால் கல்யாணி பிரியதர்ஷனிடம்  தேவையில்லாமல் தானே நெருங்கி பழகி காதலிக்க  நினைக்கிறார்.  ஒரு கட்டத்தில் அவரது காதல் கை கூடுகிறது.

ஆனால் கல்யாணியின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தென்படுவதை நஸ்லேன் உணர்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு ஒரு விதமான அமானுஷ்ய சக்தி இருப்பதைக் கண்டு வியந்து போகிறார் நஸ்லேன். ஒருநாள், கல்யாணி பிரியதர்ஷனுக்கு ஆபத்து ஏற்பட அவரைக் காப்பாற்றச் செல்கிறார் நஸ்லேன். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’.படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு, அதிரடி ஆக்‌ஷன் சண்டைக் காட்சிகளில் அனைவரையும்   மிரள வைக்கிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், தனது அளவான உடல் அசைவுகள் மூலம் சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கல்யாணியின் காதலனாக வரும் நஸ்லேன் சாதாரண ஒரு இளைஞனாக நம் கண்ணுக்கு தெரிந்தாலும் தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக பயந்த சுபாவம் கொண்ட நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார்.

கல்யாணி ப்ரியதர்ஷனால் கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்களாக நடித்திருக்கும் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் அதிர  வைக்கிறது. அவருடைய அந்த ஸ்டைலான நடிப்பு நம்மை பெரிதும் கவர்கிறது.

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் இருவரும் திடீரென வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்கள்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் இல்லாமல் தரமானதாகவும் காட்டி இருப்பதை பாராட்டலாம்.

வித்தியாசமான கதையை வித்தியாசமான முறையில் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர்.  புராணக் கதைகளையும் நவீன காட்சியமைப்பையும் இணைத்து, ஒரு புதிய சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பை இந்த படம் சுட்டிக்காட்டினாலும், . நகைச்சுவை மற்றும் அமானுஷ்யம் என கதையில் நம்மை பயணம் செய்ய வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் டொமினிக் அருண்.

மொத்தத்தில், ’லோகா – அத்தியாயம் 1 :  சந்திரா’ படம் அனைவரையும் கவரும்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.