’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
அனிஷ் அஷ்ராப் இயக்கத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சென்னை பைல்ஸ் முதல் பக்கம்”.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கதையின் நாயகன் வெற்றியின் தந்தை ஒரு பிரபல கிரைம் எழுத்தாளர், அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத துடிக்கும் பத்திரிக்கையாளர் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவி செய்வதற்காக வெற்றி சென்னைக்கு வருகிறார். அவரது வீட்டிற்கு சென்று ஷில்பாவை சந்தித்து பேசும்போது, வெற்றியை தனது பத்திரிக்கை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார். சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் ஒரு கொலை குற்றத்தை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க தம்பி ராமையா முயலும்போது வெற்றி பெரிதளவில் உதவி செய்கிறார். கிரைம் எழுத்தாளர் மகன் வெற்றியின் துப்பறியும் அறிவுத் திறனால் ஈர்க்கப்படும் தம்பி ராமையா, தனக்கு உதவியாக அவரை வைத்துக் கொண்டு பயணிக்கிறார். இதே போல் அடுத்தடுத்து பல உதவிகளை அவருக்கு வெற்றி தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் பல இளைஞர்கள் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் தம்பி ராமையா கொலையாளிகளை கண்டுபிடிக்க முயலும்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த மாதியான கொடூரமான முறையில் கொலைகளை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிப்பதற்கு வெற்றியுடன் இணைந்து செயல்படுகிறார் தம்பி ராமையா. இறுதியில் தொடர் கொலைகளை செய்கின்ற கொலையாளி யார்? எதற்காக முகத்தை சிதைத்து அந்த கொலைகளை செய்கிறான்? என்பதுதான் “சென்னை பைல்ஸ் முதல் பக்கம்” படத்தின் மீதிக் கதை.
பல படங்களில் வெற்றி கதாநாயகனக நடித்திருந்தாலும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்பதால் அதை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு இந்த படத்தில், நல்ல முன்னேற்றமாகவும், சிறந்த முறையில் நடிப்பும் இருக்கிறது. .ஒவ்வொரு கொலையின் பின்னணியில், துப்பறியும் காட்சிகளில் வழக்கமான உடல்மொழியோடு வெற்றி வெகு எளிதாக கொலையாளியை கண்டுபிடிக்கும் காட்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக்கும் விதத்தில் நடித்திருக்கிறார், ஒரே மாதிரியான நடிப்பு என்ற தனது குறையை முற்றிலும் தவிர்த்துவிட்டு, இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறை காண முடியாத அளவிற்கு நிறைவாக நடிப்பினை கொடுத்துள்ளார் .
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான காமெடியான உடல்மொழியோடு நடித்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை. ஆனல் தன் மகளை நினைத்து வேதனைப்படும் காட்சியில் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் மகேஸ்வரன் தேவதாஸ் படத்தை தயாரித்ததுடன் கட்டுமஸ்தான கொடூர வில்லனாக அதற்கேற்ற உடல்வாகுடன் மிரட்டலாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
அரவிந்தின் ஒளிப்பதிவும், விஷாலின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்த உதவியிருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் கலந்த சமூக பிரச்சனைகளை பற்றியும் பேசி, அதற்கேற்றவாறு கதையை ஒரு சுவாரஸ்ய கட்டத்துக்கு கொண்டு வந்திருப்பது ரசிக்கும்படி உள்ளது. ஒரு குற்றம் நடந்தபின் குற்றவாளி யார்? அந்த தேடும் முயற்சிக்கு அறிவும் அனுபவமும் தேவைப்படும் என்பதால் அந்த வகையில் சரியான கதைக்களத்தை தேர்வு செய்து இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.